
குருநாகல் மாவட்டத்தின் அனைத்து தபால் நிலையங்களுக்கும் மறு அறிவித்தல் வரை பூட்டு
கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக குருநாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களையும் மீள் அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
பிரதேசத்தின் தபால் அதிகாரியின் அலுவலகம் மற்றும் குருநாகல் பிரதான தபால் காரியாலயம் ஆகியவற்றில் கடமையாற்றும் 14 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதன் காரணமாகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குருநாகல் அஞ்சல் அதிகாரி காரியாலயத்தில் அண்மையில் 6 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் குறித்த 14 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதேவேளை, அரலகங்வில காவல்துறையின் உப காவல்துறை பரிசோதகர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.
இந்த நிலையில் அவர்களுடன் தொடர்புடைய 91 காவல்துறை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 136 பேருக்கு பி.சீ.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அரலகங்வில காவல்துறை நிலையத்திற்கு பிறிதொரு காவல்துறை அதிகாரிகள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.