மூன்றாம் தவணைக்காக நாளை பாடசாலைகள் ஆரம்பம்

மூன்றாம் தவணைக்காக நாளை பாடசாலைகள் ஆரம்பம்

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர அனைத்து பகுதிகளிலும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகளை நாளைய தினம் திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. பெரேரா இதனைத் தெரிவித்தார்.

இருப்பினும் நாளை பாடசாலைகளை ஆரம்பிப்பதில் சிக்கல் இருப்பதாக ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.

அத்துடன் ஆறாம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரை தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சுகாதார விதிமுறைமைகள் பின்பற்றப்பட்டு கல்வி நடத்தப்பட வேண்டும் என்று தொற்றுநோயியல் பிரிவின் தலைமை நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்திய பகுதிகளை தவிர ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளை திறப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

எனினும் மாணவர் அல்லது பாடசாலை பணிக்குழாமில் எவரேனுக்கும் கொவிட் 19 தொற்றுக்கான நோய் அறிகுறிகள் காணப்பட்டால் பாடசாலைக்கு சமூகமளிக்காமல் இருக்கவேண்டும்.

அதேநேரம் பாடாசலைக்கு சமூகமளித்த எவரேனுக்கும் நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக ஏனையவர்களுடன் விலகிச் சென்று தேவையான மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு அல்லது ஓய்வினை பெற வீடுகளுக்கு செல்ல வேண்டும்.

அத்துடன் பாடசாலைக்கு செல்லும் போதும் வெளியேறும் போது பாடசாலை நுழைவாயிலுக்கு அருகில் நெரிசல் நிலை ஏற்படாத வகையில் இருக்க வேண்டும்.

வீட்டில் இருந்து வெளியேறும் போதும் பாடசாலைகளுக்கு உள்நுழையும் போதும் கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் என்பதோடு முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என தொற்று நோயியல் பிரிவின் தலைமை நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.