
மூன்றாவது முறையாகவும் நேற்றைய தினம் ஒரே நாளில் 5 மரணங்கள்...!
கொவிட் 19 தொற்றினால் நாட்டில் மூன்றாவது முறையாகவும் ஒரே நாளில் 5 மரணங்கள் நேற்று பதிவாகின.
இந்த மரணங்கள் அனைத்தும் கொழும்பு மாநகர எல்லை பகுதியில் இடம்பெற்றுள்ளன.
இதன்படி கொவிட் - 19 தொற்றினால் நாட்டில் உயிரிந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளதென அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 13 ஜிந்துபிட்டியை சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
நீண்டகாலமாக காணப்பட்ட புற்றுநோய் மற்றும் கொவிட் 19 தொற்றுறுதியும் மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் கொழும்பு 15 சேர்ந்த 39 வயதுடைய ஆண் ஒருவரும் மரணித்தார்.
அவர் கொவிட்-19 தொற்றுறுதியானவர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணித்துள்ளார்.
புற்றுநோய் மற்றும் கொவிட் 19 - நியூமோனியா காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளது.
இதேவேளை கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 88 வயதான ஆண் ஒருவரும் மரணித்தார்.
இருதய கோளாறு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் மரணம் சம்பவித்துள்ளது.
கொவிட் 19 தொற்றால் அவர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம் கொழும்பு - 8 பொறளையை சேர்ந்த 79 வயதான ஆண் ஒருவர் தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.
கொவிட்-19 தொற்றால் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பே மரணத்திற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் கொழும்பு - 13 ஐ சேர்ந்த 88 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.
கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பே இந்த மரணத்திற்கு காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் ஓக்டோபர் மாதம் 22 ஆம் திகதி வரையில் 13 கொவிட் 19 மரணங்களே பதிவாகியிருந்தன.
எனினும் கடந்த 15 நாட்களில் கொவிட் 19 தொற்றால் 45 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் 171 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதன்படி நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 495 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.