
நாளை அதிகாலை தொடக்கம் தனிமைப்படுத்தப்படவுள்ள பகுதிகள்
மருதானை, டேம் வீதி, புறக்கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் களனி காவற்துறை அதிகாரப் பகுதிகள் நாளை (16) அதிகாலை தொடக்கம் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
அதன்படி, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள காவற்துறை அதிகாரப்பகுதிகளின் எண்ணிக்கை 24ஆக காணப்படுவதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் இலங்கை போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான பேருந்து சேவைகள் வழமையான முறையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
புறக்கைகோட்டை மற்றும் பெஸ்ட்டியன் மாவத்தையில் உள்ள மத்திய பேருந்து நிலையம் இயங்கும்.
எனினும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பேருந்துகள் நிறுத்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், வார இறுதி தினங்களில் இடைநிறுத்தப்பட்ட தொடருந்து சேவைகள் நாளைய தினம் வழமையான முறையில் இடம்பெறும் என தொடருந்து கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
80 தொடருந்துகள் கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து நாளைய தினம் சேவையில் ஈடுப்படுத்தப்படும் என்பதுடன் அவை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நாளை விசேட அலுவலக தொடருந்து சேவைகளும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.