
தீபாவளி பண்டிகையினை கொண்டாடும் உலகவாழ் தமிழர்கள்..!
உலகெங்கிலும் வாழும் இந்துமக்கள் வழமைக்கு மாறான ஒரு சூழ்நிலைக்கு மத்தியில் இன்று தீபாவளி பண்டிகையினை கொண்டாடுகின்றனர்.
வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில் இன மற்றும் சமய நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் மேம்படுத்துவதற்கு தீபாவளி போன்ற கலாசார விழாக்கள் பெரிதும் உதவும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் வாழும் இந்துக்கள் தீபாவளி பண்டிகை தினமான இன்று அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி சமயக் கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.
தீபத்திருநாள் தீபாவளி பண்டிகையானது அனைத்து உள்ளங்களிலும் இருள் நீங்கி ஒளிபெற்று நல்வாழ்வு வாழ்வதற்கான பிரார்த்தனையுடன் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளும் கலாசார விழா என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது.
முழு உலகமும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல்வேறு பாரிய பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் சமயக் கிரியைகளில் ஈடுபடுவது மனித உள்ளங்களுக்கு அமைதியை தருகின்றது.
இந்த தீபத் திருநாளில் அந்த அமைதிக்காக எமது நாட்டிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்துக்களும் ஒருமனதாக கடவுளுக்காக அர்ப்பணிப்புகளை செய்வர் என்பது நம்பிக்கையாகும்.
அது சிறந்ததோர் சமூகத்தையும் ஆரோக்கியமான வாழ்வையும் கட்டியெழுப்பும் எமது நோக்கத்திற்கு ஆசீர்வாதமாக அமையும் என தாம் எண்ணுவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ள்ளார்.
இதேவேளை, தேசிய ஒற்றுமைக்கு இது ஒரு சிறந்த நாளாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஆன்மீக ஞான ஒளியை இறைவழிபாடு மூலம் பெறும் சிறப்பு வாய்ந்த நன்னாளே தீபாவளித் திருநாள் ஆகம்.
இருளையும் அறியாமையையும் அகற்றி ஒளியை பரப்புவதற்கே எல்லா மதங்களிலும் விளக்கு ஏற்றப்படுகின்றது
தீபாவளியும் அதன் எதிர்பார்ப்புகள் நிறைந்த தீப ஒளியும் சமூகங்களுக்கு மத்தியிற் சிறந்த புரிந்துணர்வுக்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.
மிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்துவைத்திருந்த எல்லா வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இந்த தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம்.
இன்று நம் தேசம் 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு அமைவாக ஒளிநிறைந்த வளர்ச்சிப் பாதையிற் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது.
அனைத்துத் துறைகளிலும் நாம் முன்னேற்றம் காண முயல்கின்றோம்.
இன்று உலகையே அச்சுறுத்திவரும் கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாக்கும் பணியினை அரசாங்கம் மக்கள் அனைவரதும் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக செயற்படுத்தி வருகின்றது.
கொவிட்-19 நோய்த்தொற்றிருந்து இலங்கை விரைவில் மீள்வதற்கும் அனைத்து மக்களுக்கு எல்லா சுபீட்சங்களையும் தரும் நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக இந்த தீபாவளித் திருநாள் அமையட்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதேவேளை தீபாவளியை வீடுகளிலிருந்தே கொண்டாடுங்கள் என இந்து மதத் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இம்முறை தீபாவளியை இந்துக்கள் வீடுகளில் இருந்து இறைவனைப் பிரார்த்தனையோடு கொண்டாடுங்கள்.
இந்த கொடிய கொரோனாநோயிலிருந்து நாம் விடுபட வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து வீட்டிலிருந்து அமைதியான முறையில் கொண்டாடுங்கள் என யாழ்ப்பாணம் இந்து மாமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்துமதத் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
உலகளாவிய ரீதியில் கொரோனாதாக்கம் அதிகரித்துவரும் நிலையில் இலங்கையிலும் தற்போது தொற்று வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது
இந்த நிலையில் இந்துக்களின் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
எனவே தற்போதுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு இந்து மக்கள் தீபாவளியை வீடுகளிலிருந்து ஒன்றுகூடல்களை தவிர்த்து அகவணக்கம் ஊடாக கொண்டாட வேண்டும்.
அவ்வாறு கொண்டாடுவதன் மூலம் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும்.
அதோடு தீபாவளி நாளன்று ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டினை மேற்கொள்ளாது வீடுகளிலிருந்து தத்தமது குலதெய்வங்களை பிரார்த்தியுங்கள் எனவும் இந்துமதத் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
இதேவேளை, இந்து மதத்தைச் சார்ந்த மக்கள் இன்று தீபாவளியை கொண்டாடுகின்ற சூழ்நிலையில், கொவிட்19 பரவல் காரணமாக இந்தமுறை தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக சுகாதார அமைச்சின் விசேட சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி கோவில்கள் மற்றும் தோட்டக் கிராமங்களில் அல்லது சமுகங்களில் ஒன்றுக்கூடி கொண்டாட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
தத்தமது வீடுகளில் தங்கி இருந்து இந்தமுறை தீபாவளியை கொண்டாடுவதே உசிதமானது என்று சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் தொற்றுநோய் தடுப்பு பணிமனை அறிவுறுத்தியுள்ளது
அதேநேரம் மதுசாரம் கலந்த தொற்றுநீக்கி திரவங்களைப் பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்தியதன் பின்னர், தீயுடன் சம்மந்தப்பட்ட விளக்கேற்றுதல், பட்டாசு கொழுத்துதல் போன்ற கருமங்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் உறவினர்களது வீடுகளுக்கு செல்லுதல், மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்கள் என்பவற்றையும் தவிர்க்க வேண்டும்.
மேல் மாகாணத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
அதனை மீறி செல்வோர் அவர்கள் இருக்கும் இடத்திலேயே 14 நாட்களுக்கு கட்டாயக சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.