வடக்கில் திங்கட்கிழமை முதல் மீண்டும் அனுமதி! டக்ளஸ் நடவடிக்கை

வடக்கில் திங்கட்கிழமை முதல் மீண்டும் அனுமதி! டக்ளஸ் நடவடிக்கை

வடக்கு கடல் பகுதியில் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் கடலட்டை பிடிப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்குமாறு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

எனினும் குறித்த அனுமதியானது “ஸ்கின் டைவிங்” எனப்படும் சாதாரண சுழியோடி முறையின் ஊடாக மாத்திரமே மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் ஸ்கியூபா எனப்படும் சிலிண்டர் முறையில் கடலட்டை பிடிக்க அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.

எனினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வடக்கு கடலில் கடலட்டை பிடிப்பது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரையின் அடிப்படையில் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தடை திங்கட் கிழமை முதல் வழமைக்கு திரும்ப உள்ளது.

இதேவேளை வடக்கு கடல் பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் பயன்படுத்தப்படுவதாக தனக்கு தகவல்கள் கிடைப்பதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை பயன்படுத்துகின்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.