
குருநகர்ப் பகுதியில் கட்டடங்களை இடித்தழிக்கும் மாநகர சபையின் முயற்சி பொதுமக்களால் முறியடிப்பு!
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட குருநகர் பகுதியில் வடிகால்களுக்கும் மேலாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு இருந்த வீடுகள் மற்றும் கடைகள் இன்றைய தினம் யாழ்ப்பாண நகர சபையினரால் இடித்து அழிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தின் பரிந்துரைக்கு அமைய யாழ்ப்பாண பொலிசாரின் பாதுகாப்புடன் இன்றைய தினம் பெக்கோ இயந்திரத்துடன் கட்டடங்களை இடிப்பதற்காக வருகை தந்த போதிலும் அப்பகுதி மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட வடிகாலுக்கு மேலாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வீடுகள் மற்றும் கடைத் தொகுதிகளை அப்புறப்படுத்த மாநகரசபை ஊழியர்கள் சென்றிருந்தனர்.
எனினும் அப்பகுதி மக்கள் குறித்த கட்டடங்களை அகற்ற தமக்கு உரிய காலம் வழங்கப்பட வேண்டுமெனவும் மழை காலத்தில் தாம் மாற்று வழிகளை ஏற்படுத்த முடியாது எனவும் தமக்கு கால அவகாசம் தரப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனடிப்படையில், மாநகர சபையினால் குறித்த காலப்பகுதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் அந்த காலப்பகுதிக்குள் அவர்கள் அகற்ற தவறினால் மாநகரசபையினால் அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.