தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், கொவிட்; 19 தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்படும் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, முகத்துவாரம், புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, கிரான்ட்பாஸ், கரையோர பிரதேசம், ஆட்டுப்பட்டித்தெரு, மாளிகாவத்தை, தெமட்டகொடை, வெல்லம்பிட்டி, பொரளை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய காவற்துறை அதிகார பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், மட்டக்குளியின் மெத்சந்த செவன, மிஹிஜயசெவன, முகத்துவாரத்தின் ரண்மின செவன, தெமட்டகொடையின் சிறிசந்த உயன, மாளிகாவத்தையின் தேசிய வீடமைப்புத் திட்டம் போன்ற தொடர்மாடிகளில் இருந்து எவரும் வெளிச் செல்லவோ, அல்லது உட்பிரவேசிப்பதற்கோ அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, பேலியகொடை, கடவத்தை, ராகம, நீர்கொழும்பு, பமுனுகம, ஜா-எல, சபுகஸ்கந்தை ஆகிய காவற்துறை அதிகார பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர, களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, இங்கிரிய காவற்துறை அதிகார பிரதேசங்களிலும், வேகட - மேற்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குருநாகல் மாவட்டத்தில் - குருநாகல் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், குளியாப்பிட்டி, மாவனெல்ல, ருவான்வெல்ல ஆகிய காவற்துறை அதிகார பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் ஊடாக போக்குவரத்து மேற்கொள்ள முடியும் எனவும் தனிமைப்படுத்தப்படுத்தல் பகுதிகளில் இருந்து எவரையும் வாகனத்தில் ஏற்றவோ இறக்கவோ முடியாது என காவற்துறை தெரிவித்துள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த பகுதிகளில் இருந்து எவரும் வெளியேறவோ அல்லது உற்பிரவேசிக்கவோ முடியாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் மேல் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் பயணிகள் போக்குவரத்து நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் போக்குவரத்து சேவையை முன்னெடுப்பது தொடர்பில் கொவிட் போக்குவரத்து கொள்கையை அடுத்த வாரம் அமுல்ப்படுத்தவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் சில விடயங்களை அமுல்ப்படுத்த வேண்டுமாயின் பேருந்து பயணக்கட்டணங்களை அதிகரிக்க கூடிய நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் அந்த பகுதிகளில் இருந்து சேவைக்கு சமூகமளிக்கும் அரச சேவையாளர்களின் எண்ணிக்கையை தொடர்ந்தும் மட்டுப்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரட்ணசிறி இதனை தெரிவித்துள்ளார்.