ஒருவரின் வெற்றி வாய்ப்பை முடிவு செய்யும் நேர மேலாண்மை

காலையில் எழுந்ததும் ஒவ்வொருவருக்கும் 24 மணி நேரம் கிடைக்கிறது. அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே ஒருவரின் வெற்றி வாய்ப்பு முடிவு செய்யப்படுகிறது.

காலையில் எழுந்ததும் ஒவ்வொருவருக்கும் 24 மணி நேரம் கிடைக்கிறது. அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே ஒருவரின் வெற்றி வாய்ப்பு முடிவு செய்யப்படுகிறது. கீழ்க்கண்டப்படி பின்பற்றினால் நேர மேலாண்மை செய்வது எளிதாகிவிடும்.

அர்ப்பணிப்புடன் எடுத்த காரியத்தை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பதற்கு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். நேரத்தை ஒதுக்க முடியாத காரியத்தில் ஈடுபடக் கூடாது. நிச்சயம் நம்மால் செய்யப்பட வேண்டிய, முடிய கூடிய செயலை செய்ய மட்டுமே நேரத்தை ஒதுக்க வேண்டும். முடியாத பல செயல்களை பட்டியலிட்டு முடியாமல் பிற்பாடு மனவருத்தம் கொள்வது தவறு.

 


தொடர்ந்து விருப்பம் உள்ள செயல்கள் பின்பற்றுதல் நம் மனம் மகிழக் கூடிய, புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய மற்றும் திருப்தி அளிக்க கூடிய செயல்களை செய்தல். அத்தகைய நிறுவனங்களில், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கில் கவனம் செலுத்த வேண்டும். இந்த கட்டுப்பாடுகளுக்கு இடையில் நம்முடைய படிப்பு சார்ந்தவற்றையும் கவனிக்க நேரம் ஒதுக்க வேண்டும்.

நேரத்திற்கு ஏற்ற செயலை செய்தல் அல்லது செய்யும் செயலுக்கு ஏற்றப்படி செயலை செய்தல். ஒரு செயல் செய்வதற்கு எவ்வளவு நேரமாகும் என்பதை கணிப்பது கடினமான ஒன்று. முடிந்தவரை குறிப்பிட்ட நேர இடைவெளி கொடுத்து பணிகளை செய்வதற்கு பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். குறிப்பிட்ட கால நேரத்தில் உங்களுக்கு நீங்களே விளையாட்டிற்கோ அல்லது வேறு பணி செய்வதற்கோ தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் தீர்மானம் செய்த பணியை மட்டுமே செய்ய வேண்டும்.

ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்ய பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். நான்கு வேலையை ஒரே நேரத்தில் செய்ய முயன்றால் ஒரு வேலையையும் செய்ய முடியாமல் போகும். வேலையை மாற்றி மாற்றி செய்வதால் கவன சிதறல் ஏற்பட்டு நாம் நினைத்த நேரத்தில் வேலையை செய்ய முடியாமல் போகும்.

மிகப்பெரிய கால அளவில் செய்யக்கூடிய வேலைகளை, படிப்பும் மற்றும் பயிற்சிக்கான தனிப்பட்ட நேரத்தை குறிப்பிட்ட கால அளவில் ஒதுக்கி கொள்ள வேண்டும். உதாரணமாக இசைப்பயிற்சி பயில செல்வதாக இருந்தால் வாரத்துக்கு இத்தனை நாள் அல்லது இந்த கிழமை மட்டும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் வேறேந்த வேலையையும் செய்வதற்கு ஒப்பு கொள்ளக்கூடாது.

பணிகளை ஒரு நாளில் செய்வதற்கு அட்டவணைப்படுத்தும் போது அதில் முக்கியமான பணியை முதலில் செய்வதற்கு குறித்து கொள்ள வேண்டும். குறிப்பிடப்பட்ட நேரத்தில் குறிப்பிட்ட பணிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதுபோல் எந்த பணியை முதலாவதாக செய்ய முடியுமோ அதை முதலாவதாக குறித்து கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் வேறு பணி செய்ய முடியாமல் போனது பற்றி வருத்தப்பட கூடாது.

வாடிக்கையாக சில செயல்களை செய்ய பழக்கப்படுத்திக் கொள்ளலாம். வாரத்திற்கு ஒரு நாள், மாதத்திற்கு ஒருநாள் அல்லது குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை சில நல்ல பொழுதுப் போக்கு பகுதிகளுக்கு செல்லுதல், சுற்றுலா செல்லுதல், பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி திட்டமிடலாம். இத்தகைய பணிகளை இடையில் ஓய்வு கிடைக்கும்போது அல்லது விடுமுறை கிடைக்கும் போது செய்யலாம்.

பணி அட்டவணைகளுக்கு இடையே சிறுசிறு மாற்றங்கள் செய்யலாம். அதாவது ஒரு நாளில் சில நேரம் ஒரு பணிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அந்த பணியை செய்ய முடியாவிட்டால் வேறு பணியை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். அட்டவணையை அப்படியே கடைப்பிடிப்பதைவிட நேரத்திற்கு ஏற்றது போல் மாற்றி கொள்வது புத்திசாலித்தனம்.

ஒரு பணியை செய்ய முற்படும்போது மற்றொரு பணியை பற்றி கவலைப்பட வேண்டாம். அப்படி கவலைப்படுவற்கு பதில் நேரத்தை சற்று குறைந்து கூட அட்டவணையை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கி செல்லும்போது படிப்பில் அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்று கவலை கொள்ள வேண்டாம். அதே சமயத்தில் உடற்பயிற்சியை முழுதாக நிறுத்தி விட்டு உடல்நலத்தை கெடுத்து கொள்ள கூடாது. மாறாக உடற்பயிற்சிக்கு ஒதுக்கிய நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தை குறைத்து அந்த நேரத்தை படிப்பிற்கு ஒதுக்கலாம்.

நம் வேலை செய்யும் சூழ்நிலையை நமக்கு தகுந்தவாறு பார்த்து கொள்ள வேண்டும். முடிந்தவரையில் கவனச் சிதறல் ஏற்படுவதை குறைத்து கொள்ள வேண்டும். காலையில் நிகழ்ச்சிக்கு செல்ல ஆடையை அயன் செய்வது என்றால் அதை செல்போனில் குறிப்பெடுத்து கொள்வதற்கு பதில் ஆடையை முன்னரே எடுத்து வைத்து அயன் பாக்சையும் பக்கத்திலேயே எடுத்து ஒரு மேஜையில் வைத்து கொண்டால் காலையில் ஞாபகம் வரும். இப்படி செய்யாவிட்டால் காலையில் எழுந்தவுடன் வழக்கமான வேலைகளில் மனம் சென்றுவிடும். பிறகு நிகழ்ச்சிக்கு தாமதமாக போக வேண்டி வரும். ஒவ்வொரு பணிக்கு உரிய சக நண்பர்களை ஒரு குழுவாக வைத்து பணி செய்யலாம். பணிக்கு குறிப்பிட்ட நேரத்தில் தேவையில்லாமல் தொலைபேசி அழைப்புகள் வருவதை தடுக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தொலைபேசியில் அழைப்பதை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் வீண் அரட்டையில் நேரம் போவதே தெரியாது. அத்தோடு செய்யும் வேலையும் அரைகுறையாக போய்விடும்.

இப்படியாக கால நேரத்தை பணிக்கு ஏற்றவாறு ஒதுக்கி நடைமுறை படுத்த வேண்டும். இதனால் சரியான நேரத்தில் பணிகள் முடிந்து நம்முடைய வேலைபளு மிச்சமாகும். அதோடு மனதுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.