PCR இயந்திரத்தைப் பழுது பார்க்க சீனாவிலிருந்து வரும் தொழில்நுட்பவியலாளர்கள்
ராகமை போதனா வைத்தியசாலையில் செயலிழந்துள்ள பி.சி.ஆர் இயந்திரத்தை திருத்துவதற்காக சீனாவிலிருந்து தொழில்நுட்பவியலாளர்களை விரைவில் அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களை இலங்கைக்கு வரவழைக்கும் நிலையில் நாட்டில் நடைமுறையிலுள்ள சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுமென்றும் விமான நிலையத்திலேயே அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமென்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து வரவழைக்கப்படவுள்ள தொழில் நுட்பவியலாளர்கள் வைத்தியசாலையில் இரசாயன பிரிவில் தனியாக தங்க வைக்கப்படுவதுடன் பி.சி.ஆர் இயந்திரத்துக்கான திருத்த வேலைகள் நிறைவுற்றதும் அவர்கள் மீண்டும் சீனாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ராகமையிலுள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட ஆய்வகத்தில் பி.சி.ஆர் இயந்திரம் செயலிழந்துள்ளது.
அதனால் சுமார் 20,000 பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கான முடிவுகளை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இயந்திரத்தை பழுது பார்ப்பதற்காகவே சீன தொழில்நுட்பவியலாளர்கள் இலங்கை வரவுள்ளனர்.