எடுக்கப்பட்ட முடிவிற்கான காரணம் என்ன? இராணுவத் தளபதி விளக்கம்
கொரோனா தொற்றாளிகளின் முதல் தொடர்பாளர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தும் தீர்மானம், தனிமைப்படுத்தல் வசதியில் ஏற்பட்ட இடநெருக்கடி நிலை என்று தெரிவிக்கப்பட்ட தகவலை இராணுவத் தளபதி மறுத்துள்ளார்.
சில நடைமுறை பிரச்சினைகள் காரணமாகவே இந்தமுடிவு எடுக்கப்பட்டது. இதனை தவிர இடநெருக்கடி நிலையினால் குறித்த முடிவு எடுக்கப்படவில்லை என்று இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சிலர் 14 நாட்களுக்கு பின்னர் அங்கிருந்து செல்வதற்கு மறுப்பு வெளியிடுகின்றனர். சிலர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு செல்லும்போது தம்மில் தங்கியிருப்போர் மற்றும் தமது வளர்ப்பு பிராணிகள் குறித்து கவலை வெளியிடுகின்றனர்.
இதுபோன்ற பிரச்சினைகளை கருத்திற்கொண்டே நேற்று முதல் கொரோனா தொற்றாளிகளின் முதல் தொடர்பாளர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வீடுகளில் தனிமைப்படுத்தல் வசதிகள் இல்லாதவர்கள் பிரதேச சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின்கீழ் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்று இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.