பருத்தித்துறையைச் சேர்ந்த இருவர் மீது நடுக்கடலில் வைத்து இரவிரவாக தாக்குதல்

பருத்தித்துறையைச் சேர்ந்த இருவர் மீது நடுக்கடலில் வைத்து இரவிரவாக தாக்குதல்

பருத்தித்துறை எரிஞ்ச அம்மன் கோவிலடியை சேர்ந்த இருவர் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற போது நடுக்கடலில் வைத்து முகமூடி அணிந்த ஒன்பது பேர் குறித்த இருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது.

நேற்று பிற்பகல் கடல் தொழிலுக்காக பருத்தித்துறை எரிஞ்ச அம்மன் கோவிலடியிலிருந்து இருவர் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் நாகர்கோவில் கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர்.

இதன்போது மூன்று படகுகளில் வந்த முகமூடி அணிந்த ஒன்பது பேர் தொழிலில் ஈடுபட்ட இருவரையும் சுற்றி வளைத்து இரவு 7:00 மணியிலிருந்து அதிகாலை இரண்டு மணிவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

அவர்கள் தாக்குதல் நடாத்தும் போது “நீங்கள் தானே எம்மை கடலட்டை தொழில் செய்ய விடாது தடுத்தது”, என கேட்டுக் கேட்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.

அத்துடன் அவர்களிடமிருந்த 45,000 பெறுமதியான ஜீபிஎஸ் நங்கூரம் உட்பட்ட பொருட்களையும் பறித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இருவரும் அவர்களிடமிருந்து தப்பி படகுடன் கரை வந்து சேர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக இருவரும் பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.