
நீர்ப்பாசன திணைக்களத்தின் செயற்பாட்டால் கடுமையாக பாதிக்கப்படும் விவசாயிகள்!
நாட்டில் வாழும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் அதிகாரிகளின் சில செயற்பாடுகள் தொடர்பில் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி விவசாயிகள் தண்ணீர் இன்மை காரணமாக தங்களுடைய விவசாயத்தினை மேற்கொள்வதில் பாரிய சிக்கலினை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
வாகனேரி பிரதேசத்திலுள்ள தவணை கண்டம், கக்கரிமடு கண்டம், மக்கிளான கண்டம், பருத்திச்சேனை கண்டம், கொடித்தீவு கண்டம், தரிசேன கண்டம், வட்ட கண்டம் ஆகிய கண்டங்களில் பதினையாயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் இம்முறை பெரும்போக விவசாயத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான தவணைக் கண்டத்திலுள்ள அணைக்கட்டு பழுதடைந்துள்ள நிலையில் புதிய அணைக்கட்டினை நிர்மானிக்கும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பெரும்போக விவசாய செய்கைக்கு முன்னர் பூர்த்தி செய்து விவசாயிகளின் பாவனைக்கு வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டது.
ஆனால் பெரும்போக விவசாய செய்கை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கடந்த 10ம் திகதி விவசாய செய்கைக்கு நீர் வழங்குவதாக விவசாய கூட்டத்தில் நீர்பாசன திணைக்களத்தினால் வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில் இதுவரை விவசாயத்திற்கு நீர் வழங்கப்பட்டவில்லை.
பெரும்போக விவசாய செய்கைக்கு முன்னர் பூர்த்தி செய்து தருவதாக கூறிய அணைக்கக்கட்டு இதுவரைக்கும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது. இதனால் நீர் செல்வதற்கான பாதைகள் மண்ணால் மூடப்பட்டு காணப்படுவதால் விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்லும் வழி தடைப்பட்டு காணப்படுகின்றது.
விவசாய செய்கைக்கு தண்ணீர் இன்மை தொடர்பில் நீர்பாசன திணைக்களத்தினருக்கு விவசாயிகளினால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் விவசாயி ஒருவரின் வயலினூடாக கை வாய்க்கால் வெட்டப்பட்டு நீர் குறைவாக வழங்கப்பட்ட நிலையில் வாய்க்கால் உடைந்ததன் காரணமாக நீர் செல்வது தடைப்பட்டு காணப்பட்டது.
அதன்பிற்பாடு விவசாயிகள் வாய்க்கால் உடைந்ததன் காரணமாக ஏற்பட்ட தடையை நீக்கும் வகையில் தடையினை அகற்றிய பொழுதும் வரம்புக்கட்டில் உள்ள மணல்கள் மீண்டும் உடைப்பெடுத்த வண்ணமே காணப்படுவதுடன், இதன் மூலம் கிடைக்கும் தண்ணீர் பதினையாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய செய்கைக்கு போதுமானதாக அமையாது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே உடனடியாக நீர்பாசன திணைக்களத்தினத்தினர் குறித்த அணைக்கட்டினை மிக விரைவாக பூர்த்தி செய்து விவசாயிகள் பாவனைக்கு வழங்குவதுடன், விவசாயிகளுக்கு நேர்த்தியான முறையில் தண்ணீர் கிடைப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ஆகவே குறித்த விடயம் தொடர்பில் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோர் நடவடிக்கை எடுக்க முன்வருமாறு விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.