புதிய ஶ்ரீ ராமர் கோவிலுக்கு இலங்கையில் இருந்தும் அடிக்கல்

புதிய ஶ்ரீ ராமர் கோவிலுக்கு இலங்கையில் இருந்தும் அடிக்கல்

அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் ஶ்ரீ ராமர் கோவிலுக்கான அடிக்கல் ஒன்று இலங்கையிலிருந்து பூஜிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்தக் கல் இலங்கையின் மலைப் பிரதேசமான நுவரெலியாவில் உள்ள சீதாஎலிய சீதையம்மன் கோவிலின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கண்டெடுக்கப்பட்டு இதுவரை பூஜிக்கப்பட்ட ஒன்றாகும்.

இராமாயணத்தில் போற்றப்படும் இலங்கையின் கோவிலாகவே நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயம் வர்ணிக்கப்படுகிறது.

அந்த ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்படும் போது குறித்த கல் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் பின் இதுவரை காலமும் அந்தக் கல் பூஜிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அயோத்தியில் கட்டப்படும் ஶ்ரீ இராமபிராணின் கோயிலுக்கான அடிக்கற்களில் ஒன்றாக இதனை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கல் சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்திலும் ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் பூஜையிலே வைக்கப்பட்டு பரிபாலன சபையின் மூலமாக கொழும்புக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, கொழும்பிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பவும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.