நாட்டில் நேற்றைய தினம் 121 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நாட்டில் நேற்றைய தினம் 121 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

நாட்டில் நேற்றைய தினம் 121 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 6 பேர் அடங்கலாக இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

மினுவாங்கொடை கொத்தணியில் மாத்திரம் நேற்றைய தினம் 115 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த 24 பேருக்கும், அவர்களுடன் தொடர்புடைய 91 பேருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 14 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 10 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 395 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் 2 ஆயிரத்து 67 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, காங்கேசன்துறையில் கொவிட் 19 தொற்றுறுதியான இருவர் பயணித்த வழி தடங்கள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதி பிள்ளை மகேசன் தகவல் தருகிறார்.

இதேவேளை, தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 53 ஆயிரத்து 395 பேர் இதுவரை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இதனை தெரிவித்துள்ளது.

அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் 86 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் இயங்கி வருகின்றன.

அவற்றில் ஒன்பதாயிரத்து 415 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குளியாபிட்டி போதனா மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானயைடுத்து அந்த மருத்துவமனையின் 12 வைத்தியர்கள் உள்ளிட்ட 53 பணிக்குழாம் உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பபட்டுள்ளனர்.

குளியாபிட்டி போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் பிரபாத் வேரவத்த இதனை தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக குளியாபிட்டி ஊருபிட்டி மற்றும் கய்யால ஆகிய பகுதிகளுக்கு பிரவேசிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு கப்பல்துறையில் சேவையாற்றிய காலி - கிதும்பிட்டி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

அவர் இரணவில கொவிட்-19 சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பபட்டுள்ளார்.

இதேவேளை, நாட்;டில் இருந்து வெளிநாடு செல்லும் சகல பயணிகளும் தங்களது பயண நேரத்திலிருந்து 72 மணித்தியாலங்களுக்குள் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வானுர்தி நிலையம் மற்றும் வான் சேவைகள் நிறுவனம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது

இன்று மாலை 6 மணி முதல் இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படவுள்ளதாக அந்த நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் 19 தொற்று தொடர்பான தகவல்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்வதற்கா சுகாதார மேம்பாட்டு பணியகம் புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி, 1999 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் கொவிட் 19 தொற்று தொடர்பான தகவல்களை அறிந்துக்கொள்ள முடியும் என அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த சேவையின் ஊடாக ஒருவரில் இருந்து மேலும் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று பரவாது தடுப்பதும், தகுந்த சுகாதார பரிந்துறைகளை வழங்குவதும் உள்ள பல்வே செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பதில் சுகாதார பணிப்பாளர் நாயகம் எஸ் ஸ்ரீ தரன் தெரிவித்தார்.