யாழ்.மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சுகாதாரத் தரப்பினால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ்.மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சுகாதாரத் தரப்பினால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று குறித்து உரிய சுகாதார நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்  இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் உதவியுடன் சுகாதார நடைமுறைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொதுமக்கள் அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக வீதிகளில் நடமாடாமல் தங்களது  வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு ஆ.கேதீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

வடமாகாணத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வடமாகாணத்தில் கொரோனா தொற்று பரம்பலை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

1. பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை இறுக்கமாகப் பின்பற்ற வேண்டும்.

2. பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும்.

3. பொது இடங்களில் இருவருக்கு இடையில் ஆகக்குறைந்தது 1மீட்டர் சமூக இடைவெளி பேணப்படவேண்டும்.

4. அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள், பொது இடங்களில் சவர்க்காரமிட்டு கை கழுவிய பின்பே உள்ளே செல்ல வேண்டும், அத்துடன் வீட்டிற்கு திரும்பிய பின்பும் கைகளை சவர்க்காரமிட்டு கை கழுவிய பின்பே வீட்டிற்கு உள்ளே செல்ல வேண்டும்.

5. பொதுமக்கள் அவசியமான விடயங்கள் தவிர வெளியே செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

6. அவசியமற்ற விழாக்கள், ஒன்று கூடல்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது பிற்போடவேண்டும். கட்டாயமாக நடாத்தப்படவேண்டிய நிகழ்வுகளில் சுகாதார, பாதுகாப்பு நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றப்பட வேண்டும்.

7. பொதுப்போக்குவரத்து வாகனங்களில் ஆசனங்களுக்கு ஏற்ற எண்ணிக்கையான பயணிகள் மட்டுமே ஏற்றிச் செல்லப்படுவதுடன் அனைவரும் முககவசம் அணிவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

8. பொதுமக்கள் ஒன்று கூடும் சந்தைகள், வர்த்தக நிலையங்கள் போன்ற இடங்களிலும் சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றப்படவேண்டும்.

9. வணக்க தலங்களில் நிகழ்வுகள் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கையுடன் நடாத்தப்படுவதுடன் இதற்காக வழங்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும்.

வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வடமாகாணம்.