
பாடசாலை மாணவர்களை புறக்கணிக்கும் அரச பேருந்துகள் ; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
முன் கூட்டியே பணம் செலுத்தி ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் பெறப்பட்ட பருவகால சீட்டினை வைத்திருந்து அம்மாணவர்கள ஏற்றாது பேருந்துகள் பயணிப்பதாக மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கினிகத்தேன பகுதியில் உள்ள பிரபல சிங்கள கினிகத்தேன சென்றல் கொலேஜ், விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயம், அப் பகுதியில் உள்ள ஏனைய பாடசாலை மாணவ, மாணவிகளுக்கும் இவ்வாறு இடம்பெற்றுள்ளது.
காலை வேளையில் அரச பேருந்துகள் ஏற்றாமல் செல்வதால் பாடசாலை நேரத்திற்கு செல்ல வேண்டி உள்ளதால் தனியார் பேருந்துகளில் அதிகளவு பணம் கொடுத்து செல்ல வேண்டி உள்ளதாகவும் மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதேபோல மாலை வேளையில் பாடசாலை நிறைவு பெற்று 2 மணிக்கு மேல் அவ் வீதியூடாக வரும் அரச பேருந்துகள் ஏற்றாமல் செல்வதால் நடை பயணமாக இல்லங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது எனவும் இதனால் முன்கூட்டியே பணம் கொடுத்து பெற்று கொள்ளப்பட்ட பருவகால சீட்டில் பயன் இல்லை எனவும் கூறுகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.