யாழ். நல்லூருக்கு செல்லும் வீதியிலும் புதிய மனிதப் புதைகுழிகள் - வெளியான அதிர வைக்கும் தகவல்

யாழ். நல்லூருக்கு செல்லும் வீதியிலும் புதிய மனிதப் புதைகுழிகள் - வெளியான அதிர வைக்கும் தகவல்

யாழ்ப்பாணம் - செம்மணி சோதனைச்சாவடிக்கு அருகாமையில் இருந்த கோயிலுக்கு முன்பாகவும், நல்லூரை நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதியிலும் இன்னமும் கண்டறியப்படாத மனிதப் புதைகுழிகள் இருக்கக்கூடும் என திடுக்கிடும் தகவலை மரணதண்டனைக் கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்‌ஷ வெளிப்படுத்தியுள்ளார்.

தன்னை ஒரு சுயாதீன சாட்சியாளராக விடுவித்துக்கொள்ளும் பொறுப்பு தமிழ் மக்களுக்கு இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்‌ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவியான எஸ்.சி.விஜேவிக்கிரம கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.

 

முறையான விசாரணை

அதனையடுத்து இது பற்றிய மேலதிக விவரங்களைக் கேட்டறியும் நோக்கில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்‌ஷவை வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் மீண்டும் இரண்டாம் கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்‌ஷவைச் சந்தித்தனர்.

 

யாழ். நல்லூருக்கு செல்லும் வீதியிலும் புதிய மனிதப் புதைகுழிகள் - வெளியான அதிர வைக்கும் தகவல் | Another Mass Grave On The Road To Nallur Jaffna

அச்சந்திப்பின் போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கான கடிதமொன்றைக் காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளிடம் சோமரத்ன ராஜபக்‌ஷ கையளித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் 1996 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் தான் ஏற்கனவே அனுப்பிவைத்திருந்த கடிதத்தின் ஊடாகவும், அதன் பின்னரும் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவை குறித்து தற்போது வரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், இவ்விடயம் தொடர்பில் சுயாதீன குழுவொன்றை நியமித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அதில் கோரிக்கை விடுத்திருந்தார்.

 

புதைகுழிகள் தொடர்பில் புதிய தகவல்

இவ்வாறானதொரு பின்னணியில் தனது மனைவியான சம்பா விஜேவிக்கிரம ஊடாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் புதிய தகவல்களை சோமரத்ன ராஜபக்‌ஷ வெளிப்படுத்தியுள்ளார்.

யாழ். நல்லூருக்கு செல்லும் வீதியிலும் புதிய மனிதப் புதைகுழிகள் - வெளியான அதிர வைக்கும் தகவல் | Another Mass Grave On The Road To Nallur Jaffna

சிறைச்சாலைக்குள் இருந்து இவை பற்றிய மேலதிக விவரங்களை வெளிப்படுத்தும் பட்சத்தில் தனது பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு கேள்விகள் காணப்படுகின்றன என்றும், எனவே தன்னை ஒரு சுயாதீன சாட்சியாளராக விடுவித்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.