யாழ். மாவட்டத்தில் அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் வடக்கு ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு

யாழ். மாவட்டத்தில் அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் வடக்கு ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் வட மாகாண ஆளுநரிடம் மகஜரொன்றை கையளித்துள்ளனர்.

அரசாங்கத்தினால் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு நாடு பூராகவும் வழங்கப்படவுள்ள நிலையில் பட்டதாரிகளுக்கான அரச நியமன கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 1450 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பட்டதாரிகளுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடியதோடு வட மாகாண ஆளுநரிடம் தமது நியமனத்தை உறுதிப்படுத்துமாறு கோரி மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

குறித்த மகஜரில் நிராகரிக்கப்பட்ட காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ள EPF, ETF பிரச்சினை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை முடித்தவர்களுக்கான பிரச்சினை, 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரச்சினை போன்ற மூன்று விடயங்களை உள்ளடக்கி வட மாகாணஆளுநரிடம் மகஜர் கையளித்துள்ளார்கள்.

குறித்த விடயங்கள் தொடர்பில் உரிய தரப்பினருக்கு தெளிவுப்படுத்தி யாழ். மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனத்தை வழங்க ஆவன செய்யுமாறு கோரியுள்ளனர்.

ஏற்கனவே அரசாங்கத்தினால் நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி தமது கடமைகளை ஆரம்பிக்கின்ற நிலையில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் 2ஆம் திகதிக்குள் உரிய தீர்வு பெற்றுத்தர வேண்டும் என பட்டதாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.