இன்று முதல் நெல் கொள்வனவு ஆரம்பம்

இன்று முதல் நெல் கொள்வனவு ஆரம்பம்

இன்று (13) முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக சிறுபோக நெல் கொள்வனவு முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார். 

இதற்கமைவாக, தற்சமயம் அதிக நெல் அறுவடை இடம்பெறும் பிரதேசங்களை அண்மித்து நெற் களஞ்சியசாலைகளைத் திறந்து நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படவுள்ளது. 

அதற்கமைய, வடக்கு, கிழக்கு மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களில் தற்போது அதிகளவில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், அந்தப் பிரதேசங்களில் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஒரு கிலோ நாட்டு நெல் 120 ரூபாவிற்கும், ஒரு கிலோ சம்பா நெல் 130 ரூபாவிற்கும், ஒரு கிலோ கீரி சம்பா நெல் 140 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், நெல் கொள்வனவிற்காக ஏற்கனவே களஞ்சியசாலைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

இதற்கமைவாக, இதுவரை 143 இடங்களில் உள்ள களஞ்சியசாலைகளிலிருந்து நெல்லைக் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஏதேனும் காரணங்களால் களஞ்சியசாலைகள் முழுமையாக நிரம்பினால் அருகிலுள்ள தனியார் துறை களஞ்சியசாலைகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

அத்துடன், அரசாங்கத்தினால் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 6,000 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலதிகமாக மேலதிகப்பற்று கடன் அடிப்படையில் 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல் கையிருப்புகளை சேகரிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கையை கமநல சேவை திணைக்களம் கண்காணிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.