உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்

இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், இன்றையதினம் 24 ஆம் திகதி தபால்மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது.

தபால்மூல வாக்களிப்பு, 24,25,28 மற்றும் 29 ஆம் திகதிகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணிவரை இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம் | Lanka Local Council Elections Postal Voting Begins

அதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே தெரிவத்தாட்சி அலுவலர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம் | Lanka Local Council Elections Postal Voting Begins

மே மாதம் ஆறாம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு நிறைவேறும் தருவாயில் இருக்கின்றது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொருத்தவரை 17 உள்ளூராட்சி சபைகளுக்காக 243 வட்டாரங்களில் தேர்தல்கள் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 3 ஆயிரத்து 519 உறுப்பினர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் சார்பில் போட்டியிடுகின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, மூன்று நகர சபை, பதின்மூன்று பிரதேச சபை என பதினேழு உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

 517 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கப்பட்ட 21 ஆயிரத்து 64 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டிருக்கிறது என்றார்.

அதேவேளை வவுனியா மாவட்டத்திலும் தபால்மூல வாக்களிப்பு செயற்பாடுகள் சுமுகமாக நடைபெற்று வருவதுடன் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது தபால்மூல வாக்குகளை அளித்திருந்தனர்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 5,550 பேரும், முல்லைத்தீவில் 3,807 பேரும் மன்னாரில் 3,792 பேருமாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 13,149 பேரும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.