கணவனை துண்டுகளாக வெட்டி மலசலகூடத்தில் வீசிய மனைவி
எஸ்.ஆர்.லெம்பேட்
மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்ப தகராறு காரணமாக கணவனைக் கொலை செய்து, அவரது உடலைத் துண்டு துண்டுகளாக வெட்டி உறைகளில் (சாக்கு) பொதி செய்து மலசலகூடக் குழியில் வீசிய மனைவியை மன்னார் பொலிஸார் திங்கட்கிழமை (04) கைது செய்துள்ளனர்.
மன்னார் மூர் வீதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த தம்பதியினருக்கு இடையே கடந்த சனிக்கிழமை (02) இரவு ஏற்பட்ட கடும் தர்க்கம் காரணமாக, மனைவி தனது கணவனைத் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை (03), அன்று சடலத்தை துண்டு துண்டுகளாக வெட்டி உறைகளில் இட்டு மலசலகூடக் குழியினுள் வீசியுள்ளார்.
இது தொடர்பாக குறித்த பெண் மன்னார் பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (04) சரணடைந்துள்ளார். இதனையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் மலசலகூடக் குழியிலிருந்து சடலத்தை மீட்டனர்.
உயிரிழந்தவர் மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனவும், கொலையை செய்த அவரது மனைவி மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியை சேர்ந்த 29 வயதுடையவர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குடும்பத் தகராறு முற்றிய நிலையிலேயே இக்கொலை இடம்பெற்றுள்ளது.
சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சந்தேகநபராக அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மன்னார் பகுதியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
