மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து
மட்டக்குளி - மெதபார பகுதியில் இன்று கலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் ஒட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள வீதியில் பயணித்த பாரவூர்தி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த பெண், மத்திய வங்கியின் பணியாற்றிய ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தின் CCTV காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
இதேவேளை,நாட்டின் சில பாகங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில், தாளங்குடா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியாகினர்.
நேற்றிரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, உந்துருளி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் இருவரே பலியானதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடைய, பேருந்தின் சாரதியும், உதவியாளரும் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் கைதுசெய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை, பதுளை - மஹியங்கனை வீதியில், சொரொனாதொட்ட பிரதேச செயலகத்திற்கு அருகில், மகிழுந்து ஒன்று இன்று காலை வீதியை விட்டு விலகிச் சென்று 40 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதன்போது, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில், கர்ப்பிணி பெண்ணான பேராசிரியர் ஒருவர் அடங்குவதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் பதுளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.