சைக்கிளில் போராடும் இந்தியர் – யாழில் இருந்து பயணம் ஆரம்பம்

சைக்கிளில் போராடும் இந்தியர் – யாழில் இருந்து பயணம் ஆரம்பம்

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 64 ஆயிரம் கிலோமீற்றர் தூரம் துவிச்சக்கர வண்டியில் பயணித்து சாதனை படைத்த இந்தியாவைச் சேர்ந்த பாதுசா தமீம் அன்சாரி, இலங்கை பயணத்திற்காக யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த 40 வயதுடைய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக துவிச்சக்கர வண்டி மூலம் விழிப்புணர்வு பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

ஒரு விபத்தில் சிக்கி தனது வலது கையை முழுமையாக இழந்த போதிலும், மன உறுதியை இழக்காமல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மட்டுமன்றி அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டுள்ள அவர், இதுவரை 64,000 கிலோமீற்றருக்கும் அதிக தூரம் சைக்கிளில் பயணித்துள்ளார். மேலும், காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 3,677 கிலோமீற்றர் தூரத்தை வெறும் 20 நாட்களில் கடந்து உலக சாதனையும் படைத்துள்ளார்.

இந்தியா முழுவதுமான தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள அவர், தற்போது உலக நாடுகளிலும் இந்த விழிப்புணர்வு பயணத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இலங்கை வந்துள்ளதாக கூறினார்.

இலங்கையில் சுமார் 800 கிலோமீற்றர் தூரம் பயணிக்கத் திட்டமிட்டுள்ள அவர், அதை எட்டு நாட்களுக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார்.