அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை
அமெரிக்கா தனது சமாதானத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லையெனில் தோல்வியைச் சந்திக்க நேரிடும் என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானுடனான போர்நிறுத்தம் ஆபத்தான நிலையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து ஈரான் இதனைத் தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவியதுடன், இது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது.
இவ்வாறான பின்னணியில், இரு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைப்பதன் காரணமாக நிலையான சமாதானத்தை நோக்கிய நகர்வு நாளுக்கு நாள் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
ஈரான் மக்கள் கொண்டுள்ள உரிமைகளைத் தமது 14 அம்ச சமாதான முன்மொழிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு அங்கீகரிப்பதைத் தவிர அமெரிக்காவிற்கு வேறு வழியில்லை என ஈரான் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும் அமெரிக்க அரசாங்கம் முன்னதாக ஒரு முன்மொழிவை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.