இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு; வடக்கு உட்பட பல பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்'

இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு; வடக்கு உட்பட பல பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்'

இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டின் பல மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான  பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவித்தல் இன்று (13) காலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டதுடன், இது இன்று மாலை 3.30 மணி வரை செல்லுபடியாகும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, இன்று (13) காலை 06 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில், நாட்டின் பல பாகங்களில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதில் கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அதிக மழைவீழ்ச்சி பதிவான முக்கிய இடங்கள்:

பிலியந்தலை 198.50 மி.மீ, கலகொட (இரத்தினபுரி மாவட்டம்): 147.40 மி.மீ, இரத்தினபுரி நகரம்: 94.00 மி.மீ, யால்கும்புர (மொனராகலை மாவட்டம்): 90.60 மி.மீ, சமனலகம (இரத்தினபுரி மாவட்டம்): 86.20 மி.மீ, உடுவர (பதுளை மாவட்டம்) மற்றும் வதுரவில (காலி மாவட்டம்): தலா 85.80 மி.மீ, மேலும், கொழும்பு 7 பகுதியில் 82.00 மி.மீ மழைவீழ்ச்சியும், ஜாவத்தை பகுதியில் 76.20 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.