யாழில் வீதி சமிக்ஞையைக் கவனியாது மாணவர்களுடன் பயணிக்கும் பெற்றோர் : வடக்கு ஆளுநர் குற்றச்சாட்டு

யாழில் வீதி சமிக்ஞையைக் கவனியாது மாணவர்களுடன் பயணிக்கும் பெற்றோர் : வடக்கு ஆளுநர் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் வேம்படிச் சந்தியிலுள்ள சமிக்ஞை விளக்குப் பகுதியில் பாடசாலை நேரங்களில் சமிக்ஞையைக் கவனிக்காது பெற்றோர் மாணவர்களுடன் பயணிப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (N. Vethanayagan) தெரிவித்துள்ளார்.

அத்துடன், காணி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தமையை வரவேற்ற ஆளுநர் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தினார்.

வடக்கு மாகாணத்தின் காவல்துறை உயர் அதிகாரிகள், 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் மற்றும் ஆளுநர் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், காவல்துறையினரின் நடவடிக்கைகளில் முன்னேற்றம் இருக்கின்றது. ஆனாலும் இன்னமும் சில காவல் நிலையங்களில் மக்களின் முறைப்பாடுகளை ஏற்க மறுகின்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.

யாழில் வீதி சமிக்ஞையைக் கவனியாது மாணவர்களுடன் பயணிக்கும் பெற்றோர் : வடக்கு ஆளுநர் குற்றச்சாட்டு | Parents Travel With Students Ignore Signals Jaffna

மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய வகையில் காவல்துறையினரின் நடவடிக்கைகள் அமையவேண்டும்.

பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்களால் நெரிசல்கள் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. பாடசாலைகளுக்கு முன்பாக காவல்துறையினர் கடமையில் உள்ள போதும் வீதிகளில் நெரிசல் காணப்படுகின்றது. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மேலதிக காவல்துறையினரை கடமையில் ஈடுபடுத்த வேண்டும். 

அதேபோன்று பாடசாலைகளுக்கு அண்மையாக வீதிகளில் கனரக வாகனங்கள் தரித்து நிற்பதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பிரதான வீதிகளின் கரையோரங்களில் வாகனங்கள் தரித்து நிற்பதால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகின்றது. காவல்துறையினரின் ஒத்துழைப்பு இருந்தால் மாத்திரமே இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

யாழில் வீதி சமிக்ஞையைக் கவனியாது மாணவர்களுடன் பயணிக்கும் பெற்றோர் : வடக்கு ஆளுநர் குற்றச்சாட்டு | Parents Travel With Students Ignore Signals Jaffna

யாழ்ப்பாணத்தில் வேம்படிச் சந்தியிலுள்ள சமிக்ஞை விளக்குப் பகுதியில் பாடசாலை நேரங்களில் சமிக்ஞையைக் கவனியாது பெற்றோர் மாணவர்களுடன் பயணிக்கின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் ஆபத்தானவை என்பதால் காவல்துறையினர் பாடசாலை நேரங்களில் இத்தகைய இடங்களில் கட்டாயம் கடமைகளில் ஈடுபடவேண்டும்.

யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் இடம்பெறும் சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என ஆளுநர் தெரிவித்தார்.