உயிரிழந்ததாக தகனம் செய்யப்பட்ட சிறுவன் ; உயிருடன் வந்ததால் பரபரப்பு

உயிரிழந்ததாக தகனம் செய்யப்பட்ட சிறுவன் ; உயிருடன் வந்ததால் பரபரப்பு

இந்தியாவில் பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டதாகக் கருதப்பட்டு தகனம் செய்யப்பட்ட 17 வயது சிறுவன் உயிருடன் திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் காணாமல் போனதாக அவனது குடும்பத்தினர் பெப்ரவரி 8 ஆம் திகதி பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.

உயிரிழந்ததாக தகனம் செய்யப்பட்ட சிறுவன் ; உயிருடன் வந்ததால் பரபரப்பு | The Boy Was Cremated As Dead

சில வாரங்களுக்குப் பிறகு, அல்லல்பட்டி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் கை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்டு அடையாளம் காண முடியாத ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அது காணாமல் போன சிறுவன் என கூறி குடும்பத்திடம் அந்த உடல் ஒப்படைக்கப்பட்டது. குடும்பத்தினரும் அந்த உடலை தகனம் செய்துள்ளனர். சிறுவனின் குடும்பத்துக்கு அரசாங்கத்திடமிருந்து இந்திய மதிப்பில் 4 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர்களின் மகன் ஏப்ரல் 17 ஆம் திகதி தர்பங்கா மாவட்ட நீதிமன்றத்தில் உயிருடன் ஆஜராகி தனக்கு நேர்ந்ததை விவரித்துள்ளார்.

அதாவது, கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மூன்று முதல் நான்கு பேர் தனது வாயை துணியால் மூடியதாகவும், அதனால் தான் சுயநினைவை இழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் விழித்துப் பார்த்தபோது தான் நேபாள் நாட்டில் இருப்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்தார். சந்தர்ப்பம் பார்த்து கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிய சிறுவன், தனது அண்ணனுக்கு வீடியோ அழைப்பு செய்துள்ளார்.

நேபாளுக்கு கிளம்பிச் சென்ற சகோதரன், தம்பியை பத்திரமாக திருப்ப அழைத்து வந்து குடும்பத்துடன் சேர்த்துள்ளார். பொலிஸார் மீது நம்பிக்கை இழந்த குடும்பத்தினர் சிறுவனை நேராக நீதிமன்றம் அழைத்துச் சென்று ஆஜர் படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த பொலிஸார், தகனம் செய்யப்பட்ட உடல் யாருடையது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், சிறுவன் கடத்தப்பட்டது குறித்து விசாரிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.