சுற்றுலா பயணிகளால் எழுந்துள்ள புதிய சர்ச்சை!
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, தென்கரையோரத்தில் நடைபெறும் இவ்வாறான வியாபாரங்கள் தொடர்பில் நேற்று(07) விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வரும் சில சுற்றுலா பயணிகள் தற்போது விடுமுறை நாட்களில் வியாபாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
தென் கடற்கரையில் காலி, உனவட்டுன மற்றும் மிரிஸ்ஸ போன்ற சுற்றுலாப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் உள்ளனர்.
அந்தப் பகுதிகளில் தங்கியுள்ள ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரஜைகள் சட்டவிரோதமான முறையில் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டு வருவதாக சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தோடு, சுற்றுலாத்துறையை நம்பி வாழும் இந்நாட்டின் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, காலி உனவட்டுன பிரதேசத்தில் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிலர் நேற்று எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.
மேலும், ஹபராதுவ பிரதேச செயலகத்திற்கு வந்த அவர்கள் தமது பிரச்சினையை அதிகாரிகளிடம் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.