காதலித்த பெண்ணையும் அவரது தந்தையையும் கத்தியால் குத்திய நபரின் விபரீத முடிவு!

காதலித்த பெண்ணையும் அவரது தந்தையையும் கத்தியால் குத்திய நபரின் விபரீத முடிவு!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு பகுதியில் இன்று அதிகாலை நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள தேத்தாத்தீவு பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆடைகள் தைக்கும் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றிய விவாகரத்துப்பெற்ற ஒரு பிள்ளையின் தாயான 29 வயதான பெண்ணிற்கும் அதே நிறுவனத்தில் பணியாற்றும் தேத்தாத்தீவு பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தருக்கும் இடையே காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அவர்களின் காதலுக்கு பெண் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இன்று காரைதீவு பகுதிக்கு அதிகாலை சென்ற குறித்த குடும்பஸ்தர் ஒளிந்திருந்து காதலித்த பெண் மற்றும் பெண்ணின் தந்தையையும் கத்தியால் குத்தி படுகாயப்படுத்திய நிலையில், தப்பி சென்று தனது வீடு அமைந்துள்ள தேத்தாத்தீவு பகுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த பெண் மற்றும் அவரது தந்தை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் தற்கொலை செய்து கொண்ட குடும்பஸ்தரின் சடலம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்கொலை செய்து கொண்ட குடும்பஸ்தர் தனக்கு திருமணமானதையும் 12 வயதில் பிள்ளை ஒன்று இருப்பதையும் மறைத்து காதலித்ததுடன் திருமணம் செய்வதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக தயாரான நிலையில் பெண்ணின் தந்தையினால் திருமணம் செய்த நபர் என கண்டுபிடிக்கப்பட்டடார்.

இதனால் உண்மை நிலையை அறிந்த காதலித்த பெண் உரிய விவாகரத்தை பெற்ற பின்னர் திருமணம் பற்றி பேசமுடியும் என குடும்பஸ்தரிடம் தெரிவித்திருந்த நிலையில், கோபமடைந்த அக்குடும்பஸ்தர், பெண் மற்றும் அவரது தந்தையை கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

பொலிஸ் அவசர இலக்கமான 119 கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் சென்ற குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.