குஜராத்: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 3 பேர் பலி

குஜராத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்றுவந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் பவாமென்புரா என்ற பகுதியில் கட்டுமுடிக்கப்படாத நிலையில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் கட்டிட தொழிலாளர்கள் இரவு நேரங்களில் கட்டிடத்தின் தரைத்தளத்திலேயே உறங்கிவந்தனர்.

 

இந்நிலையில், கட்டுமான பணியில் உள்ள அந்த முடிக்கப்படாத கட்டிடம் இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கட்டிடத்தின் தரைத்தளத்தில் உறங்கிக்கொண்டிருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இந்த மீட்பு நடவடிக்கையின்போது 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனால், மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.