கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு! பொலிஸ், இராணுவம் குவிப்பு

கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு! பொலிஸ், இராணுவம் குவிப்பு

சுமார் 520 பேரைக் கொண்ட புகையிரதம் மீசாலையை கடக்கும் போது இனந்தெரியாதவர்களால் கல் வீச்சு தாக்குதலுக்குள்ளாகி உள்ளது.

இதையடுத்து உடனடியாக பளை புகையிரத நிலையத்தில் புகையிரதம் நிறுத்தப்பட்டு தாக்குதலில் காயமடைந்த முதியவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் உடனடியாக பளை பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.

பளை வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த முதியவர் மீண்டும் அந்த புகையிரதத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

பெலியட்டவிலிருந்து பிரித் சுற்றுலாவாக வருடம் தோறும் யாழ். நோக்கி வருகை தரும் ஒரு குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பாடசாலை உபகரணங்கள் கர்ப்பிணித் தாய்மார்கான பொருட்கள் என்பனவற்றை நன்கொடையாக வழங்கிச் செல்கின்றனர்.

இதன் அடிப்படையில் இந்த வருடமும் பெலியட்ட என்னும் ஊரில் இருந்து ஊர்காவற்துறை நோக்கி மதகுருமார்களும் நன்கொடையாளர்களுமாக சுமார் 520 பேர் வருகைத்தந்திருந்தனர்.

இவர்கள் ஊர்காவற்துறை புகையிரத நிலையத்தில் வைத்து நன்கொடை பொருட்களை வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்ட புகையிரதம் மாலை 5.15 மணி அளவில் மீசாலையை கடக்கும்போது இனந்தெரியாதவர்களால் கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.