வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று நிர்வாக முடக்கல் போராட்டம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.
தீலிபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு அனுமதி வழங்குமாறு கோரி 10 தமிழ் தேசிய கட்சிகள் நேற்று முன்தினம் சாவகச்சேரி சிவன் கோயிலில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பூரண நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு கருத்துரைத்தார்.
இதேவேளை குறித்த நிர்வாக முடக்கத்திற்கு யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் ஒன்றியமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
அந்த ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் வடக்கு மாகாணத்தில் இன்றைய தினம் அரச நிறுவனங்கள், பாடசாலைகள் என்பன வழமை போன்று இயங்குமென அந்த மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
இதேவேளை கிழக்கு மாகாணத்திலும் வழமை போன்று அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் என்பன முன்னெடுக்கப்படுமென அந்த மாகாண ஆளுநர் அநுராதா யஹாம்பத் தெரிவித்தார்.