பிரிட்டன் சுகாதாரப் பணியாளர்களை கவுரவிக்கும் எலிசபெத் ராணி

பிரிட்டனில் தன்னலம் கருதாமல் கொரோனாவுக்கு எதிரான களப்பணியில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான சுகாதாரத்துறை பணியாளர்களை மகாராணி எலிசபெத் கவுரவிக்க உள்ளார்.

பிரிட்டனில் கொரோனா வைரசால் இதுவரை 4.29 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 41 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதாரத் துறையினர் முழுவீச்சில் கொரோனா தடுப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் களப்பணியாற்றிய டாக்டர்கள், நர்சுகள், நிதி திரட்டுபவர்கள், மற்றும் தன்னார்வலர்களின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் அவர்களை எலிசபெத் ராணி கெளரவிக்க உள்ளார். 

எலிசபெத் ராணியின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பாக சமூக சேவை செய்பவர்களுக்கு அரசப் பதக்கம் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக சேவை செய்பவர்கள் தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

 

ராணியால் கெளரவிக்கப்படுவோரின் பெயர்கள் கொண்ட பட்டியலை ஜூன் மாதம் வெளியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கிய காலகட்டத்தில் முக்கிய பங்கு வகித்த நபர்களுக்கான பரிந்துரைகளைச் சேர்க்கும் பொருட்டு, பட்டியல் வெளியிடுவது தள்ளி வைக்கப்பட்டது. தற்போது அந்த பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 10ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அந்த பட்டியலில் இடம்பெறும் நூற்றுக்கணக்கான சுகாதார பணியாளர்களை ராணி எலிசபெத் கெளரவிக்க உள்ளார்.