ஜூன் மாதமே தனக்கு சிலை செய்ய ஆர்டர் கொடுத்த எஸ்.பி.பி

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனக்கு சிலை செய்ய கடந்த ஜூன் மாதமே ஆர்டர் கொடுத்தது தெரியவந்துள்ளது.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர். அங்கிருந்த தனது பூர்வீக வீட்டை கடந்த பிப்ரவரி மாதம் தான் காஞ்சி சங்கரமடத்துக்கு வேத பாடசாலை தொடங்க தானமாக கொடுத்தார் எஸ்.பி.பி. மேலும் அங்கு தனது தாய் சகுந்தலாம்மா, தந்தை எஸ்.பி.சம்பமூர்த்தி ஆகியோரது சிலையை நிறுவ அவர் விரும்பினார்.

 

இதற்காக ஆந்திராவை சேர்ந்த சிற்பி ராஜ்குமாரிடம் ஆர்டர் கொடுத்திருந்தார். அதன் பணிகள் நடந்துவந்த நிலையில், தன்னுடைய சிலையையும் வடிவமைத்து தருமாறு கடந்த ஜூன் மாதம் சிற்பி ராஜ்குமாரிடம் எஸ்.பி.பி கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக, நேரில் சென்று சிலை செய்வதற்கு தேவையான போட்டோஷூட் நடத்த இயலாது என்பதால், அதற்கான புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார்.

தற்போது, சிலை செய்து முடிக்கப்பட்டு, இறுதிகட்ட பணிகளை சிற்பி செய்து வரும் நிலையில், எஸ்.பி.பி.யின் உயிர்பிரிந்தது. தனது மரணத்தையும் முன்கூட்டியே உணர்ந்து, சிலை வடிவமைக்க ஆர்டர் கொடுத்திருந்தாரா எஸ்.பி.பி. என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.