யாழ்.குருநகர் பகுதியில் வீடுடைத்து 20 பவுண் நகைகளை கொள்ளையிட்ட சிறுவன் சிக்கினான்

யாழ்.குருநகர் பகுதியில் வீடுடைத்து 20 பவுண் நகைகளை கொள்ளையிட்ட சிறுவன் சிக்கினான்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் எவரும் இல்லாத நிலையில், வீடுடைத்து 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையிட்ட 17 வயது சிறுவன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

சந்தேக நபரிடம் நகைகளை வாங்கி அடகு வைத்த ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், கொள்ளையடித்த நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

இந்தக் கொள்ளைச் சம்பவம் கடந்த 17ஆம் திகதி முற்பகல் இடம்பெற்றது.

வீட்டில் இருந்தவர்கள் வேலைக்குச் சென்றிருந்த வேளை, வீடுடைத்து நகைகள்மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டன.

 

 

 

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

திருநகரைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டான். அவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்துக் கொடுத்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்கள் இருவரும் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.