தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை வழங்கப்படும்- மஹிந்த

தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை வழங்கப்படும்- மஹிந்த

தமிழ் அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்கள் புரிந்தவர்கள் தவிர்ந்த ஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியும் நானும் ஆராய்ந்து வருகின்றோம். அந்தவகையில் விடுவிக்கக்கூடிய கைதிகளை விரைந்து விடுவிப்போம்.

மேலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தோம். அதன்போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பிலும் கலந்துரையாடினோம்.

குறித்த பேச்சுவார்த்தையில் நான் கேட்டுக்கொண்டமைக்கமைய சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்ப்பட்டியல் பின்னர் கிடைக்கப் பெற்றது.

இந்த விவகாரத்தை நீதி அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளோம். அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்கள் செய்தவர்களை விடுவிக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.