அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முன்னேற்றம் குறித்து அபிவிருத்திக் குழு நேரில் ஆராய்வு

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முன்னேற்றம் குறித்து அபிவிருத்திக் குழு நேரில் ஆராய்வு

யாழ்ப்பாணம், அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முன்னேற்றம் குறித்து யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு சபையின் குழு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

கடந்த 4ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற முதலீட்டாளர்களின் கலந்துரையாடலைத் தொடர்ந்து யாழ். மாவட்டத்தின் பொருளாதார முன்னேற்றம் கருதி முதலீட்டாளர்களை அதிகரித்து வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பொருட்டு இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கள விஜயத்தில், யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ். மாவட்ட அரச அதிபரும் ஒருங்கிணைப்பு சபையின் செயலாளருமான கணபதிபிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ். முரளிதரன், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை பொறியிளாளர், ஊடகவியலாளர்கள் எனப்பலர் பங்குபற்றினர்.

இவ் விஜயத்தின் முக்கியமாக கைத்தொழில் பேட்டை வளாகத்தில் அமைத்துள்ள குறைபாடு பற்றி ஆராயப்பட்டது.

இதுகுறித்து அங்கஜன் இராமநாதன் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த விஜயத்தின் மூலம் இங்குள்ள முதலீட்டு நிறுவனங்களின் குறைபாடுகளை ஆராய்ந்து தேவைப்பாடுகள் சம்பந்தமாக உரிய அமைச்சுக்களுடன் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் எட்டப்படுவதன் ஊடாக உள்ளூர் முதலீட்டாளர்களையும் உள்வாங்கி வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் யாழ். மாவட்டத்தில் தொழிற்சாலைகள் ஆரம்பிக்க வைப்பதன் ஊடாக வேலை வாய்ப்புக்களையும் உருவாக்க வேண்டும்.

சரித்து வரும் எமது பொருளாதாரம் அனைத்துத் துறைகளின் ஊடாக முன்னேற்றம் அடையவேண்டும்“ என்று குறிப்பிட்டார்.