“தமிழர்கள் வேண்டும்” டக்ளஸ் தேவானந்தா கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி, பிரதமர்

“தமிழர்கள் வேண்டும்” டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி, பிரதமர்

கிழக்கு தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணிக்கு பொருத்தமான தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்வது மிகவும் சவாலான விடயமென ஆதங்கத்தை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விரைவில் இச் செயலணிக்கு இருவர் நியமிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த கால அரசியல் தலைமைகளின் செயற்பாடுகளும் இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு காரணமாக அமைந்துள்ளதென்றும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ், முஸ்லிம் மக்களின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் ஜனாதிபதி செயலணிக்கு பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டுமென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர், பொருத்தமான இருவரை சிபாரிசு செய்யுமாறு அமைச்சரிடம் தெரிவித்திருந்தனர்.

எனினும், இதுவரை இதற்கு இரு பிரதிநிதிகள் நியமிக்கப்படாமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு காலத்தில் புத்திஜீவிகளினால் நிரம்பியவர்களாக நம்மவர்கள் இருந்தனர். கடந்த காலத்தில் தமிழர்களின் தலைமைகள் என்று கூறிக்கொண்டவர்களின் விவேகமற்ற வீரத்தின் வெளிப்பாடுகள் ஏற்படுத்திய விளைவுகளில் ஒன்றாக புத்திஜீவிகளுக்கும் தற்போது நம்மத்தியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

கடந்த கால ஆயுதச் செயற்பாடுகளினால் பல புத்திஜீவிகள் விவேகமற்ற முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.

அதன் காரணமாக பெருமளவானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

எஞ்சியிருப்பவர்களும் சமூகம் சார் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கி இருப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.

இவ்வாறான காரணங்களினால் இச் செயலணிக்கு பொருத்தமான தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை நியமிக்க முடியாமல் இருக்கின்றது. எனினும் தொடர்ந்தும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினால் விரைவில் இருவர் நியமிக்கப்படுவர் என்று தெரிவித்தார்.