தென் கிழக்குப் பல்கலையின் பதின்மூன்றாவது பொதுப் பட்டமளிப்பு விழா குறித்த அறிவிப்பு

தென் கிழக்குப் பல்கலையின் பதின்மூன்றாவது பொதுப் பட்டமளிப்பு விழா குறித்த அறிவிப்பு

இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் செப்டம்பர் 16, 17ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இந்த விழா ஒலுவில் வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தெரிவித்தார்.

செப்டம்பர் 16ஆம் திகதி காலை இடம்பெறவுள்ள அமர்வில் விஞ்ஞான பீட மற்றும் பொறியியல் பீட பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெறும் என்றும் அன்றைய தினம் பிற்பகல் கலை கலாசார பீட பட்டதாரிகளுக்கு பட்டமளிக்கப்படவுள்ளது.

இரண்டாம் நாள் அமர்வாக செப்டம்பர் 17ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்திற்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், பிற்பகல் முகாமைத்துவ வர்த்தக பீட பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

இந்த நிகழ்வில் மேற்படி ஐந்து பீடங்களினதும் 988 உள்வாரிப் பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளதுடன், 22 பேர் வியாபார நிர்வாக முதுமாணிப் பட்டத்தினையும் 03 பேர் முதுகலைமாணி பட்டத்தினையும் பெறவுள்ளனர்.

இந்நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் எம்.ஏ. கரீம் மற்றும் அதே பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. எம்.ஐ.எம். அமீன் ஆகியோர் கௌரவ கலாநிதிப் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

இவ்விழா தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் பல்கலைக்கழக நிர்வாகம் மிகுந்த அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.