சீண்டிப் பார்க்க நினைத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும்! படைகளைக் குவிக்கும் சீனா- தொடரும் பதற்றம்

சீண்டிப் பார்க்க நினைத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும்! படைகளைக் குவிக்கும் சீனா- தொடரும் பதற்றம்

இந்தியாவின் உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (LAC) அருகில் சீனா இராணுவத்தை குவித்து வருவது உண்மைதான் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில்,

சீனா இராணுவத்தை குவிப்பது தொடர்பில் இராணுவ தளபதி நரவனே, இது தொடர்பாக எனக்கு முழுமையான விளக்கத்தினை வழங்கியிருக்கிறார். ஜூன் 6ம் திகதி, இந்தியா மற்றும் சீன இராணுவ உயர் அதிகாரிகள் இடையே ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது, அதில் பரஸ்பரம் நல்ல முடிவு எட்டப்படும் என்று நம்புகிறேன்.

இதேவேளை, இந்திய எல்லைப் பகுதியில் சீனா அதிக அளவில் இராணுவத்தை குவித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மையக் பாம்பியோ அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து நேற்றைய தினம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு நரேந்திர மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஜி-7 உச்சி மாநாடு, கொரோனா வைரஸ் மற்றும் பல விஷயங்கள் தொடர்பாக ஆலோசித்ததாக கூறினார். இது தொடர்பில் ராஜ்நாத் சிங் தகவல் வெளியிடுகையில்,

பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய சூழ்நிலையில் சீனா படைகளை குவிப்பதற்கான காரணத்தை யூகத்தின் அடிப்படையில் நாம் கூறிவிட முடியாது. பேச்சுவார்த்தை மூலமாக இந்தப் பிரச்சினையை சரி செய்து கொள்ள வேண்டும் என்றுதான் சீனா தரப்பும் விரும்புகிறது.

இந்தியாவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லைப் பகுதிக்கு அதிகப்படியான இராணுவத்தை அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவின் சுயமரியாதையைக் யாரும் சீண்டிப் பார்த்துவிட முடியாது. இந்தியா யாரையும் எதிரி நாடாக நினைக்கவில்லை.

சீனா நமக்கு ஒரு அண்டை நாடு. பாகிஸ்தானும் நமது அண்டை நாடுதான். அதேநேரம் யாராவது நம்மை சீண்ட பார்த்தால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார்.

இதுவொருபுறமிருக்க, இந்தியா மற்றும் சீனா இடையே மத்தியஸ்தம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அனைத்து வகை கட்டமைப்புகளும் சிறப்பாக இருக்கின்றன.

எனவே, மூன்றாவது நாட்டின் உதவி தேவைப்படாது. சீன அதிபர் ஜி ஜின்பிங் கூட பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினையை தீர்த்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார் என்றார்.