புதிய நாடாளுமன்றில் நடக்கப்போவது என்ன? முழுமையான விபரம் இதோ!

புதிய நாடாளுமன்றில் நடக்கப்போவது என்ன? முழுமையான விபரம் இதோ!

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பணிப்பாளர் ஷான் விஜயதுங்க தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு முதலாவது அமர்வை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன் புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை அவர் நிகழ்த்தவுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

20 ஆம் திகதி காலை 9.30 இற்கு புதிய நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்படுவார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

சத்தியப்பிரமாண கொள்கையின் பின்னர் பிரதி சபாநாயகர் குழுக்களின் பிரதித் தலைவர்கள் தெரிவு இடம்பெறவுள்ளது.

பின் அரசியலமைப்பின் 33 (2) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.

சபை அமர்வை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி வருகை தரும் போது சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க ஆகியோர் நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் அவரை வரவேற்பார்கள்.

இதன்போது ஜனாதிபதி தலைமையில் கொடி ஏற்றிவைக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

படைக்கலசேவிதர், பிரதிப் படைக்கலசேவிதர் மற்றும் உதவி படைக்கலசேவிதர், சபாநாயகர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரால் ஜனாதிபதி சபைக்குள் அழைத்துச் செல்லப்படுவதுடன், அக்கிராசனத்தில் அமரும் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிய நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் தகவல்களை இணையவழி மூலம் பதிவு செய்வதற்கான வசதிகளை நாடாளுமன்ற பொதுச் செயலாளர் அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள 175 உறுப்பினர்களே இதுவரை இணையவழி ஊடாக தமது தகவல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.