ஆளுக்கொரு அறையில் தீக்குளித்த அம்மா-அப்பா: அதிர்ச்சியில் குழந்தைகள்

ஆளுக்கொரு அறையில் தீக்குளித்த அம்மா-அப்பா: அதிர்ச்சியில் குழந்தைகள்

அம்மா, அப்பா இருவரும் ஆளுக்கு ஒரு அறையில் தீக்குளித்து கொண்டதால் குழந்தைகள் இருவரும் அதிர்ச்சி அடைந்த சம்பவம் மதுரை அருகே நடந்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி என்ற பகுதியை சேர்ந்த ஜெயராஜ்-கனி தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஜெயராஜ் சொந்தமாக லாரி வைத்துள்ளதால் அவர் அடிக்கடி வெளி மாநிலங்களுக்கு செல்வது வழக்கம். மாதம் ஒரு முறை மட்டுமே வீட்டுக்கு வந்து ஒரு வாரம் வீட்டில் தங்கி விட்டு அதன் பின் மீண்டும் லாரியை எடுத்துக் கொண்டு வெளி மாநிலத்துக்கு கிளம்பிவிடுவார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளி மாநிலத்திற்கு லாரியில் சென்ற போது திடீரென லாரி ரிப்பேர் ஆகிவிட்டது. ரிப்பேர் செய்யும் அளவுக்கு அவர் கையில் காசும் இல்லை, அருகில் எந்த மெக்கானிக் ஷாப்பும் இல்லை. இதனால் லாரியை அங்கேயே விட்டுவிட்டு பணம் ஏற்பாடு செய்வதற்காக ஊருக்கு வந்தார்.

ஆனால் வீட்டில் ஏற்கனவே வறுமை இருப்பதாகவும் பணம் இல்லை என்றும் அவரது மனைவி கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்துள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதை அடுத்து ஆத்திரத்தில் ஆளுக்கு ஒரு அறையில் மண்ணெண்ணையை எடுத்து கொண்டு தங்கள் உடலில் தாங்களே தீ வைத்து கொண்டனர்

அம்மா அப்பா இருவரும் தனித்தனி அறையில் தீயில் எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து குழந்தைகள் அலறினார்கள். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீக்காயத்தில் இருந்த ஜெயராம் மற்றும் கனி ஆகிய இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்துவிட்டனர். அம்மா அப்பாவை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த குழந்தைகளுக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது. இருப்ப்பினும் இரண்டு குழந்தைகளின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அம்மா அப்பா இருவரும் ஆளுக்கு ஒரு அறையில் தீ வைத்துக் கொண்டதை நேரில் பார்த்த குழந்தைகள் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.