பொதுத் தேர்வுகள் இரத்து – தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

பொதுத் தேர்வுகள் இரத்து – தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெறவிருந்த பொதுத்தேர்வுகளை இரத்து செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின்போது பொதுத்தேர்வு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்குதலை அடுத்து தமிழகத்தில் நடைபெற இருந்த 10ஆம் மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரத்து செய்யப்படுகிறது என அறிவித்தார்.

இந்த தேர்வுகள் இரத்து செய்யப்பட்ட காரணத்தால், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது என்றும் எஞ்சியுள்ள 12ஆம் வகுப்பு தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் 80 சதவீதம் மற்றும் வருகைப்பதிவுக்கு 20 சதவீதம் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில், மாணவர்களின் நலன் கருதி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், 15ஆம் திகதி பத்தாம் வகுப்பு தேர்வை தொடங்க அனுமதிக்க முடியாது என்று கூறியதுடன் எதிர்வரும் 11ஆம் திகதி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

அதேநேரம் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், பொதுத்தேர்வை தற்போது நடத்தக்கூடாது என அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையில் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாக நேற்று தகவல் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.