அரசியல் விளையாட்டுக்கான நேரம் இது அல்ல – சோனியா காந்தி

அரசியல் விளையாட்டுக்கான நேரம் இது அல்ல – சோனியா காந்தி

நாட்டில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும் இந்த சமயத்தில்  மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு உதவ வேண்டும். அரசியல் விளையாட்டுக்கான நேரம் இது அல்ல என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு முன்னெடுத்துள்ள 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “காங்கிரஸ் ஆட்சியின் போது கடந்த 2005-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் (100 நாள் வேலை திட்டம்) பயனுள்ள ஆக்கபூர்வமான திட்டம் ஆகும். பசி,  பட்டினியால் வாடும் மக்களுக்கு உதவ இந்த திட்டம் வகை செய்கிறது.

ஏனெனில் இந்த திட்டத்தின் மூலம் மக்களின் கையில் பணம் நேரடியாக போய்ச் சேருகிறது. சுதந்திர இந்தியாவில் சிறந்த திட்டத்துக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை விட சிறந்த உதாரணம் எதுவும் கிடையாது.

நாட்டில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும் இந்த சமயத்தில் அரசியல் விளையாட்டுக்கான நேரம் இது அல்ல. மேலும் இது பாரதீய ஜனதா-காங்கிரஸ் இடையேயான பிரச்சினை அல்ல. அரசாங்கத்தின் கையில் சக்திவாய்ந்த அதிகாரம் உள்ளது. எதிர்பார்ப்புகளுடன் மக்கள் இருக்கும் இந்த நேரத்தில் இந்த திட்டத்தை பயன்படுத்தி அவர்களுக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்.

இந்த பயனுள்ள திட்டம் என்பதால் தான் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. இந்த திட்டத்தை எதிர்க்கும் ஆட்சியில் கூட கடந்த 6 ஆண்டுகளாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மோடி அரசாங்கம் இந்த திட்டத்தின் முக்கியத்துவம் அறியாமல் இருக்கிறது. பிரதமராக பதவி ஏற்றதும் இந்த திட்டத்தை முடக்குவது சாத்தியம் இல்லாதது என்பதை புரிந்து கொண்ட மோடிஇ அதன் முக்கியத்துவத்தை குறைக்க விரும்பினார். வேண்டா வெறுப்பாக இந்த திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

காங்கிரஸ் ஆட்சியின் தோல்விக்கு அடையாளமாக இந்த திட்டம் விளங்குவதாக மோடி குறை கூறினார். ஆனால் கடும் எதிர்ப்பின் காரணமாக இந்த திட்டத்தை மத்திய அரசால் முடக்க முடியவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.