புதிய தேசிய பிறப்புச் சான்றிதழ் அறிமுகம்!

புதிய தேசிய பிறப்புச் சான்றிதழ் அறிமுகம்!

பிறப்புச் சான்றிதழ் என்பதற்கு பதிலாக தேசிய பிறப்புச் சான்றிதழை அறிமுகம் செய்யவுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதிவாளர் நாயகம் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான நியமங்களுக்கு அமைவாக புதிய தேசிய பிறப்புச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பழைய பிறப்புச் சான்றிதழில் காணப்படும் குறைபாடுகள்,  புதிய தேசிய பிறப்புச் சான்றிதழில் களையப்பட்டுள்ளதாகவும், பதிவாளர் நாயகம் திணைக்களம் கூறியுள்ளது.

இதன் அடிப்படையில், 6 விடயங்களை அடிப்படையாக வைத்து புதிய தேசிய பிறப்புச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிறப்புச் சான்றிதழ் என்பதற்கு பதிலாக தேசிய பிறப்புச் சான்றிதழ் எனும் பெயரில் புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

மும்மொழிகளிலும் தேசிய பிறப்புச் சான்றிதழ் தயாரிக்கப்படுவதுடன், பிறப்பின்போதான, விசேட தனித்துவ அடையாள இலக்கம் ஒன்றும் வழங்கப்படும்.

மிகவும் பாதுகாப்பான தாள் ஒன்றில் அச்சிடப்படவுள்ளதுடன், உடனடி SCAN குறியீடு, அதற்கான இலக்கம், Watermark ஆகியவற்றுடன் தயாரிக்கப்படவுள்ளது.

விசேடமாக, பதிவாளர் நாயகம் திணைக்கள ஆணையாளரின் கையொப்பத்துடன், புதிய தேசிய பிறப்புச் சான்றிதழ் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மதம் தொடர்பான தகவல்கள், பெற்றோர் விவாகமானவரா இல்லையா என்பது தொடர்பான தகவல்கள் ஆகியன புதிய பிறப்புச் சான்றிதழில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

மேலும், தேசிய இனம் தொடர்பான தகவல்களில் பெற்றோரின் தேசிய இனத்தை மாத்திரம் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த புதிய தேசிய பிறப்புச் சான்றிதழை விநியோகிக்கும் நடவடிக்கைகள், அது தொடர்பான செயன்முறைகள் பூர்த்தியாக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் எனவும், பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.