புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்படும் தினம்!

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்படும் தினம்!

கொவிட் தொற்றுநோய் காரணமாக பல சந்தர்ப்பங்களில் பிற்போடப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (22) நடைபெற்றது.

இதன்போது கொவிட் தொற்றுக்குள்ளான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் விசேட முறைமையின் கீழ் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வசதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் வழமை போன்று நடத்தப்படும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கொவிட் தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை சுமார் 5 மாத கால தாமதத்தின் பின்னர் இன்று நடைபெற்றது.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு இன்று பரீட்சை நடைபெற்றது.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 255,062 சிங்கள மொழி மூல பரீட்சார்த்திகளும் 85,446 தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகள் உட்பட மொத்தம் 340,508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

இது 2,943 பரீட்சை மத்திய நிலையங்களிலும், 108 விசேட மத்திய நிலையங்களிலும் இடம்பெற்றது.

இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மிக விரைவில் வெளியிட எதிர்ப்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன குறிப்பிட்டார்.

இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.