தோனியை விட ஜடேஜாவுக்கு அதிகச் சம்பளம் ஏன்?

தோனியை விட ஜடேஜாவுக்கு அதிகச் சம்பளம் ஏன்?

தோனியை விடவும் ஜடேஜாவுக்கு அதிகச் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது குறித்து சிஎஸ்கே அணியில் விளையாடிய உத்தப்பா பதில் அளித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் எதிா்வரும் பருவத்துக்கான ஏலம் நெருங்கி வரும் நிலையில், அணிகள் தக்க வைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் நேற்று வெளியானது. சிஎஸ்கே அணியில் ஜடேஜா, தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜா (ரூ. 16 கோடி), எம்.எஸ்.தோனி (ரூ. 12 கோடி), மொயீன் அலி (ரூ. 8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (ரூ. 6 கோடி) எனச் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல். பாலாஜி கூறியதாவது:

சிஎஸ்கே வீரராகத் தன்னை நிரூபித்தவர் ஜடேஜா. பேட்டிங், பந்துவீச்சிலும் அற்புதமாகத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தோனியை யாரும் மாற்ற முடியாது. எப்போதும் என்னுடைய கேப்டன் தோனி தான். சிஎஸ்கே அணியின் இதயமும் ஆன்மாவும் தோனி தான் என்றார்.

தோனியை விடவும் ஜடேஜாவுக்கு அதிகச் சம்பளம் வழங்கப்படுவது குறித்து சிஎஸ்கே அணியில் சமீபத்தில் விளையாடிய வீரர் ராபின் உத்தப்பா கூறியதாவது:

ஜடேஜாவுக்கு அதிகச் சம்பளம் என்பதை தோனி தான் முடிவு செய்திருப்பார். அணியில் ஜடேஜாவின் மதிப்பு தோனிக்குத் தெரியும். தோனி ஓய்வு பெற்ற பிறகு சிஎஸ்கே அணியை ஜடேஜா தான் வழிநடத்துவார் என எண்ணுகிறேன். ஜடேஜாவுக்கான மரியாதை, மதிப்பை சிஎஸ்கே அளித்துள்ளது என்றார்.