பரீட்சைகள் தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்.

பரீட்சைகள் தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்.

நாட்டில் தற்போதுள்ள நிலைமையில்  கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த திகதியில் மாற்றம் ஏற்படக் கூடும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித கேசரிக்கு தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் மீண்டும் தீவரமடைய ஆரம்பித்துள்ள நிலையில் பாடசாலைகளுக்கு ஒருவார காலம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமை தொடரும் பட்சத்தில் தேசிய பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படுமா என்பது குறித்து வினவிய போதே பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த மூன்று மாத காலமாக ஊரடங்கு சட்டம் , வைரஸ் பரவல் என்பவற்றின் காரணமாக கற்பித்தல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. அதனைக் கருத்திக் கொண்டு மாணவர்களின் நலன்கருதி கல்விப் பொதுத்தராதர பரீட்சை , ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை என்பன செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டன.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அந்த பரீட்சைகளை நடத்துவதற்கு சுமார் 5 மாத காலம் காணப்படுகிறது. எனவே அது பற்றி சற்று காலம் தாழ்த்தி தீர்மானிக்கப்படும். புலமைப்பரிசில் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி செப்டெம்பர் 13 ஆம் திகதி நடத்தப்படவிருக்கிறது.

எனினும் உயர்தர பரீட்சைகளை செப்டெம்பர் 7 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த திகதியில் மாற்றம் ஏற்படக் கூடும். இவை பற்றி எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. தற்போதைய நிலைமை வழமைக்குத் திரும்பிய பின்னர் இது குறித்து ஆராயப்படும் என்றார்.