அடுத்த சில தினங்கள் ஆபத்தானவை: ஸ்ரீலங்கா மக்களுக்கு விசேட கோரிக்கை!

அடுத்த சில தினங்கள் ஆபத்தானவை: ஸ்ரீலங்கா மக்களுக்கு விசேட கோரிக்கை!

அடுத்து வரும் சில தினங்களில் சமூகத்திற்குள் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்படும் ஆபத்து இருப்பதாக இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனால் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசனைகளை முறையாக பின்பற்றுமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக இராணுவ தளபதி கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர்,

இந்த வாரம் மிக முக்கியமானது, கொரோனா வைரஸ் தொற்றி இருப்பதை அறியாமல் சிலர் விடுமுறையில் வீடுகளுக்கு வந்துள்ளனர்.

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டதும் நாங்கள் அனைவரையும் மீண்டும் உள்ளே அழைத்துக்கொண்டோம். எனினும் அவர்கள் சமூகத்தில் நடமாடிய இடங்கள் உள்ளன. இதனால், கொரோனா சமூகத்திற்குள் செல்லாது என்று எவராலும் கூற முடியாது.

அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் பாதுகாத்துக்கொண்ட இந்த நிலைமையை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள அனைவரும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியமானது.

அடுத்த நான்கு, ஐந்து தினங்களில் ஏதோ ஒரு ஆபத்து இருக்கின்றது. முககவசங்களை அணியுங்கள். உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

தொற்றுக்கு உள்ளாகி, மற்றுமொருவரை தொற்றுக்கு உள்ளாக்காதீர்கள் என மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.